மதுரை விவசாயக் கல்லூரி

மதுரை விவசாயக் கல்லூரியில் அசோஸ் ஸ்பிரில்லம் பாஸ்போ பேக்டேரியா ரைசாபியம் சூடோமோனஸ் டிரைக்கோ டெர்மா வெரிடி போன்ற நுண்ணுயிர் உரம் மற்றும் பூஞ்சாணம் போன்றவற்றை நுண்ணுயிரித் துறை மாணவர்களும் ஆசிரியர்களும் தயாரித்து விற்கிறார்கள். நோய்த்தடுப்பு துறை நுண்ணுயிர்த் துறை என இரண்டு துறைகள் ஊக்கமாக செயல்படுகின்றன. VAM என்பதை தமிழில் வேர் உட்பூசனம் என்று அழகாக மொழி பெயர்த்துள்ளார்கள். விவசாயிகளுக்கு புரியும் விதத்தில் இவையெல்லாம் மாற வேண்டியுள்ளது. நாற்றாங்கால் மற்றும் தொளிக்கு இவற்றை வாங்கி குப்பை அல்லது புளித்த அரிசிக் கஞ்சியோடு இட சொல்கிறார்கள். நல்ல விஷயம் தான்.
ஆனால் உர உற்பத்தி மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டில் செயல்படும் இத்துறை, இயற்கை வேளாண்மைக்கு ஒரு துறை இல்லை. தவிர அவர்கள் ஒரு துண்டு நிலத்தைக் கூட இயற்கை வேளாண்மைக்கோ அல்லது ஆய்வுக்கோ பயன்படுத்தவில்லை. ரசாயன உரத்தை நுன்னுயிர்களோடு கலக்காதே என்று அறிவுறுத்தும் கல்லூரி உணவு உற்பத்தித் துறையில் முக்கியமாக ஊக்கப்படுத்தும் வேலைகளில் முதல்படி கூட எடுத்து வைக்கவில்லை. அவர்கள் சோதிக்கும் புது ரகங்களில் ஒப்பிட்டு பார்த்து ஆய்வுகளைக் கூட வெளிக்கொண்டு வருவதில்லை. அவர்கள் முன்முடிவோடு இருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை தோல்வி அடையும். அல்லது நாளை இயற்கை உரங்கள் விற்பனை நடந்தால் நாமும் உரம் விற்போம். இது தவிர ஆய்வு பங்களிப்பு என்பதே இவர்களிடம் கிடையாது.
காலையில் வானொலிப் பண்பலையில் வேலம்மாள் மருத்துவமனை விளம்பரம். அதில் இப்போதெல்லாம் பெண்கள் மத்தியில் மார்பகக் புற்றுநோய் பரவலாகி உள்ளது என்று கூறுகிறது முதல் வரி. மருத்துவமனை ஏன் பரவலாக உள்ளது என்று சொல்லாது. ஆனால் மக்கள் இயற்கை வேளாண்மை உணவுப் பொருளை ஒரு மாற்றாக பார்க்கத் துவங்கிவிட்டார்கள். அதை பற்றிய ஆய்வுகளை செய்ய வேண்டிய மருத்துவத் துறையும் வேளாண்மைத் துறையும் மற்றவர்களை போலிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு ஆணியையும் பிடுங்குவதில்லை. மருந்து விற்கும் முகவர்களாகவே இவர்கள் மாறி போனார்கள். மனசாட்சியை விற்று விட்ட பின்னர் இவர்களிடம் பேச என்ன இருக்கிறது? என்று வந்துவிடுவேன்.
Elango Kallanai
மதுரை விவசாயக் கல்லூரிSocialTwist Tell-a-Friend

No comments: